...எனது கிராமத்துக்குத் திரும்பல்......
என் வீதிகள் தோறும்
கற்பக தருக்களின்
குறுகத் தறித்த சடலங்கள்.
என் ஊரின் வீடுகள்
வேட்டை நாய் குதறிப் போட்ட
கோழிக் குஞ்சின் உடல் மீதிகள்!
எனது கிராமமோ இன்று
கிழித்தெறியப் பட்ட ஒவியம்!
தசாப்தங்களில்
கணக்குப் பார்க்க முடியுமான
கால இடைவெளிக்கு அப்பால்
எனது கிராமம் எனக்கு
அன்னிய மாகி விட்டது!
பற்றைக் காடுகள் வளர்ந்து
ஒழுங்கைகளை அழித்திருக்கும்!
விதைத்தவனைத் தெரியாமல்
புதையுண்ட நிலக் கண்ணிகள்!
ஓரு சில காப்பரங்களுக்கு
எனது கிராமமும்
காவலாக்கப் பட்டிருக்கும் விந்தை;
அகதி வாழ்வை எனக்கு
வரமாகத் தந்திருக்கிறது!
கோயில், வயல்,தோட்ட வெளி,குளம்,கிணறு
பட்டமேற்றும் புகைவண்டிப் பாதை,முத்தவெளி,
பள்ளிக்கூடம், பனைவடலிக்காணி,
பட்டாளத்துக்கு புட்டவிக்கும் சீமெந்து ஆலை,
கப்பல் வந்து சைரன் அடிக்கும் துறைமுகம்,கீரிமலை,சடையம்மா மடம்........
எல்லாம் எல்லாம்
திரும்பிப் போக முடியாத தூரத்தில்.................
இரு இருந்துபார்!
மல்ரி பரல்களும்,கிபிர்களும், துவக்குகளும்
என்னைப் புதைக்கும் தடைகளும்,வதைகளும்
ஒருநாள் ஒதுங்கும்!
நான் எனது கிராமத்துக்குத் திரும்புவேன்!
.....................இக்கவிதை ஞானம் சிற்றிதலில் 2001ஆண்டு மார்ச் மாதம் வெளியானது இச்சஞ்சிகை கண்டியில் இருந்து வெளியானது இப்போது வருகிறதா எனத்தெரிய வில்லை என்றாலும் மனதை குடையும் கவிதை.
4 comments :
மாவை.வரோதயன் தன் ஊர் பெயரை முன்னுடன் முழங்கும் இவர் அதிகமான கவிதைகளை அச்சு ஊடகங்களிலும்,இலத்திரனியல் ஊடகங்களிலும் பிரவசித்துக்கொண்டிருக்கிறார்.//
மாவை வரோதயன் 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இறந்து விட்டார் சகோதரா.
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D
எங்களூர்களைப் பிரிந்து, மீண்டும் எம் ஊர்களை அடையும் ஞாபகங்களை அவரின் கவிதை கிளறிச் செல்கிறது.
நன்றி உங்களின் வருகைக்கு எனக்கும் அதே வேதனைகள்தான் காலம் பதில் கூறட்டும்.
அரியதகவலுக்கு நன்றி 2009 எங்கள் வாழ்வில் பலதுயரங்கள் அதில் சிறந்த கவிஞர் இவரின் இழப்பும் கவி உலகிற்கு ஈடுசெய்யமுடியாதது.
Post a Comment